இலங்கை

சுரேஷ் சலேயை சிறைக்குள் கொலை செய்ய முயற்சி; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை சிறைக்குள் வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது. சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபடத் தயாராகவுள்ளோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

அரசியல் பழிவாங்களுக்காகவே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு அசுத்தமான சிறைக்கூண்டில் அவரை அடைத்து வைத்துள்ளார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றத்துக்கு இதுவரையில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் எலிகள் ஓடித் திரியும் சிறைக்கூண்டில் அ வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுகாதார வசதியற்ற மலசலக்கூடத்துக்கு அருகில் சலேவை வைத்திருப்பதால் அவர் நோயாளியாக்கப்படுவார். சிறைக்கூண்டில் வைத்தவாறு அவரை கொலை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரசாங்கத்தின் இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது. சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்கு கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகவுள்ளோம்.நாட்டு மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *