முச்சந்தி

எரிபொருள் விலை அதிகரிப்பு அரசாங்கத்தின் ”மாபியா” வேலை; எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

நாட்டில் போதுமானளவில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் மக்கள் அச்சமடையவோ எரிபொருள் சேமிப்பிலோ ஈடுபடத்தேவையில்லையென ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், திடீரென எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருப்பது மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் மாபியா வேலை என ஐக்கிய மக்கள் சக்தியின்கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் 26 நாட்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் 30 நாட்களுக்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உறுதி அளித்திருந்தார். அவ்வாறு கையிருப்பு இருக்கும் போது, எதற்காக நள்ளிரவில் அவசரமாக எரிபொருட்களின் விலையை உயர்த்த வேண்டும்?எனவே மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மாபியா வேலையே இது.

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பழைய கையிருப்பிற்கு புதிய விலையை அறவிடுவது மக்களை ஏமாற்றும் செயல்.மத்திய கிழக்கு போரை காரணம் காட்டி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது இதனால் நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல்களுக்குப் பொறுப்பான வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *