இலங்கை

இலங்கையைக் கடந்து செல்லும் 60,000 எண்ணைக் கப்பல்கள்; இந்தியாவில் ஹர்ஷ டி சில்வா 

இந்துச் சமுத்திரத்தில் போர்ச் சூழல் ஒன்று ஏற்படுமாயின் அது இலங்கையை மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்துக்கும் கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

டில்லியில் இடம்பெற்ற ரைசினா உரையாடல் – 2026 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்தியா சென்றுள்ளார். அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச கடல் பகுதியில், ஆனால் இலங்கைக் கடற்பரப்பிற்கு சற்று வெளியே ஈரானிய கடற்படை போர்க்கப்பல் தாக்குதலுக்குள்ளானது. எவ்வாறிருப்பினும் அந்த தாக்குதல் எமது பிரத்யேக பொருளாதார கடற் பிராந்திய எல்லைக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது.

இலங்கை எப்போதும் ஒரு அமைதியான நாடாகவே இருந்து வருகிறது, அந்த நிலைப்பாடு தொடரும். மத்திய கிழக்கு போர் சூழலில் நாம் யாருக்கும் சார்பானவர்கள் அல்ல. இலங்கை செய்திகள் அந்த வகையில் இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் தான் நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்து சமுத்திரத்தில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம். பல ஆண்டுகளாக கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே, அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் இதைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் நிதானமாகவும், மனித உயிர்கள் குறித்து எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்து சமுத்திரத்தில் மோதலை நாம் விரும்பவில்லை.

உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதையிலிருந்து இலங்கை சில கிலோ மீற்றர் தொலைவில் தான் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 60,000 கப்பல்கள் இலங்கையைக் கடந்து செல்கின்றன. பெருமளவிலான எரிபொருள் இதன் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

எனவே, இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்துக்கும் கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து நாம் கவலையடைகின்றோம். இவ்வாறான மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இவை இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிக்கல்கள் ஏற்பட்டால் அது எம்மை கடுமையாகப் பாதிக்கும்.

அது மாத்திரமின்றி மத்திய கிழக்கிலுள்ள இலங்கை பணியாளர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை என்பவற்றிலும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும்.

இந்தப் போர் சில வாரங்களுக்குள் முடிவுக்கு வந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் இது நீடித்தால், நிச்சயமாக எங்களுக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *