பலதும் பத்தும்

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் தென் ஆபிரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்தும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் வென்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களினால் நியுசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியுசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸர் 5 பவுண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் நியுசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஸாம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சஞ்சு சாம்சனின் இந்த 89 ஓட்டங்கள் என்பது ரி20 உலகக் கிண்ணஇறுதிப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஒட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் தொடக்க வீரர் ரிம் சீபெர்ட் 52 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் சான்டர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்களையும், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தை அடுத்தடுத்து இரண்டு தடவைகள் வென்ற ஓரே அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *