முச்சந்தி

எந்தவொரு இராணுவ நடவடிக்கை, மோதலின்போதும் மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது – நாமல் வலியுறுத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள நாமல் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈரானிய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி மத்திய கிழக்கில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொதுமக்கள் பலர் ஒளிந்துகொள்ளவும் தஞ்சமடையவும், பாதுகாப்பான இடம் தேடிச் செல்வதாக கூறப்படுகிறது.

எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது.

மேலும், மத்திய கிழக்கு உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய கிழக்குப் பகுதிகள் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், தற்போது ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அங்கு பணிபுரிகின்றனர். அந்தப் பகுதிகளுக்கான வலுவான இராஜதந்திர உறவுகளை இலங்கை பேணிவருகிறது.

எனவே, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை எங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.

எந்தத் தூண்டுதலும் இல்லாமல் பொதுமக்கள், பொருளாதார நிலையங்கள் மற்றும் முக்கியமான உட்கட்டுமானங்களை குறிவைத்து நடத்தும் எந்தத் தாக்குதலும் ஏற்க முடியாதது.

இதுபோன்ற செயல்கள் நிலைதடுமாற்றத் தன்மையை மேலும் தீவிரப்படுத்தி, உலகம் முழுவதும் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்புகின்றன என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *