இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்? – விஜயதாச ராஜபக்ஷ கேள்வி

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் வரிசைகளில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

எனினும், கேன்களில் எரிபொருள் வழங்க அரசாங்கம் விதித்துள்ள தடையால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அவர்களின் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முறையான வழிமுறையொன்றை உருவாக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உலகில் நிலவும் யுத்த சூழலுக்கும் இலங்கைக்கும் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், அதன் தாக்கம் நம்மைப் பாதிக்கின்றது என்றும், இதன் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதோடு விமானங்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

​தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

2022ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ‘ஐஸ்’ போதைப்பொருள் தடைசெய்யப்பட்ட ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், சிறு குற்றங்களுக்காக நபர்களை சிறையில் அடைப்பது அவர்களை பாரிய குற்றவாளிகளாக மாற்றும் என எச்சரித்தார்.

தான் பதவியில் இருந்த காலத்தில் சிறு குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைத்து கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், பொலிஸார் போதைப்பொருளைக் கைப்பற்றியவுடன் அதன் பெறுமதியைத் தாங்களாகவே நிர்ணயித்து ஊடகங்களுக்கு அறிவிப்பதை விமர்சித்தார்.

இவ்வாறான அறிவிப்புகள் சமூகத்தை தவறாக வழிநடத்துகின்றன என்றும், இதனை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

​ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தான் முன்னரே எச்சரித்தபோது தனக்கு எதிராக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக நினைவு கூர்ந்த அவர், 50 பேர் கொண்ட பெயர் பட்டியலொன்று இலங்கை வசம் இருந்தும் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என கவலை தெரிவித்தார்.

முன்னாள் சட்டமா அதிபர் ஒரு ‘மகா மூளையதாரி’ பற்றி ஊடகங்களில் குறிப்பிட்டாரே தவிர சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அரசியல் இலாபங்களுக்காகவே இந்த விவகாரம் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் சாடினார். அத்துடன், இந்த ஏப்ரல் மாதத்திலாவது அந்த ‘மகா சூத்திரதாரி” யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தும் என மக்கள் காத்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும், அசாத் மௌலானாவைக் கைது செய்வதற்கு முன்னதாக, நாட்டுக்காகச் சேவையாற்றிய சுரேஷ் சலேயைக் கைது செய்வது தவறானது என்றும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்பவர் அல்ல என்பதால் அநாவசியமாக அவரை வீதியில் வைத்து கைது செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *