இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தாய்நாடே முதல் இடம்; ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு இது ஒரு ‘ஹுண்டு’நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் என எப்போதுமே தாய்நாடே மிக முக்கியமானது. ஆனால், எமது முன்னோர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எடிதராகப் போராடிப் பாதுகாத்த, அஞ்சாத ரணவிருவக்கள் கொடூர பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த இந்த நாடு, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஒரு ‘ஹுண்டு’ (மிகச்சிறிய அளவு) நாடாக மாறியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு மற்றும் அமைப்புப் பணிகள் தற்போது மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைவர், 5வது நிறைவேற்று அதிகாரி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் எதிர்வரும் 6ஆம் திகதி கட்சியின் அரசியல் குழு மற்றும் செயற்குழு கூடவுள்ளது.

இதன்போது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், அடிமட்ட மக்கள் தற்போது மீண்டும் வேகமான முறையில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

​உலகில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலைகள் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், யுத்தத்தின் கசப்பான அனுபவங்களை நேரடியாக அநுபவித்த ஒரு நாடு என்ற ரீதியில் நாம் போரை எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை என்றும், தற்போதைய மோதல்களில் ஈடுபட்டுள்ள பல நாடுகள் இலங்கைக்கு இக்கட்டான காலங்களில் உதவி வழங்கியவை என்பதால் உலக அமைதி விரைவில் மலர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் கூறினார்.

நாட்டில் தற்போது நெருக்கடிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் எந்தவொரு பிரச்சினைக்கும் தெளிவான தீர்வை வழங்கத் தவறிவிட்டதாகவும் அவர் சாடினார்.

குறிப்பாக, 323 சிவப்பு முத்திரை இடப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் மற்றும் நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் தொடர்பில் இதுவரை முறையான விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், ஒரு பிரச்சினையை மூடிமறைக்க மற்றுமொரு புதிய தலைப்பை உருவாக்கி மக்களைத் திசைதிருப்பும் “இருட்டில் ஓடும் அரசாங்கமாக” இது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாதவாறு நாட்டின் கௌரவத்தை ஜனாதிபதியே பாராளுமன்றத்தில் கொச்சைப்படுத்திப் பேசுவது கவலைக்குரியது என்றார்.

1505 ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க எமது முன்னோர்கள் செய்த உயிர்த்தியாகங்களையும், 30 வருட கால எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்து எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க மஹிந்த ராஜபக்ஷ வழிவகை செய்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஆனால், தற்போதைய ஆட்சியின் கீழ் “ரணவிருவோ” எனப்படும் இராணுவ வீரர்கள் வெறும் சிப்பாய்களாகவும், மகா சங்கத்தினர் நாகரீகமற்றவர்களாகவும், தாய்நாடு ‘ஹுண்டு’ போலவும் தரம் தாழ்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

எரிசக்தி நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அவசியமில்லை எனக் கூறிய ஜனாதிபதி, நேற்று பாராளுமன்றத்தில் கையிருப்பு வசதிகள் இல்லை எனக் கூறி முன்னுக்குப் பின் முரணாகச் செயற்படுவதாகவும், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை மின்நிலையம் இல்லையென்றால் நாடு இன்றும் இருளில் மூழ்கியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஜே.வி.பி செய்ததைப் போல நாட்டு நெருக்கடியில் இருக்கும்போது தீயை மூட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யாது என அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *