உலகம்

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், ஈரான் அணியை அமெரிக்காவிற்கு அனுப்புவது குறித்து அந்நாட்டு நிர்வாகம் தெளிவான முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.

ஈரானின் கால்பந்துச் சம்மேளனத் தலைவர் மெஹ்டி தாஜ் (Mehdi Taj), உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். போட்டியைப் புறக்கணிக்கும் விடயம் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் ஆனால், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய மண்டலத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஈரான் அணி முதலிடத்தைப் பெற்று உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றது. போட்டியில் கலந்துகொண்டால் முதற்கட்டத்தில் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூஸிலந்து அணிகளுடன் மோத வேண்டியுள்ளது.

ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுவரை உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் தகுதி பெற்ற பிறகு ஒரு நாடு விலகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு பதிலாக ஈராக் அல்லது ஐக்கிய அரபுச் சிற்றரசு அணிகள் சேர்க்கப்படலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. இதற்கு முன் 2006 நவம்பரில், அரசாங்க தலையீடு குறித்த பிரச்சினையால் FIFA ஈரானுக்கு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்திருந்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.

மேலும், பெண்கள் பொதுவான விளையாட்டரங்கங்களில் போட்டிகளை காணத் தடை விதித்தமை உள்ளிட்ட காரணங்களால், ஈரானுக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சில நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு குறித்த நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *