முச்சந்தி

போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் கையிருப்புத் தேவைகளை நிர்வகித்தல், சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு குறித்து ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் இதன் மூலம் இந்நாட்டில் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதை நிர்வகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. இந்த சூழ்நிலையால் இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான கையிருப்புகளைப் பேணுவது மற்றும் அதனை நிர்வகித்தல், உலக சந்தையில் ஏற்படவிருக்கும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த நிலைமைகளை நிர்வகிப்பது
குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

எரிவாயு கையிருப்புகளைப் பேணுவதற்கு போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாததால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவது குறித்தும், அதற்காக பின்பற்றக்கூடிய குறுகிய கால மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற இடங்கள் மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, இலங்கையுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் கப்பல் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது போதுமான உணவுக் கையிருப்பு உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு வழியாக இந்நாட்டிற்கு வருகை தருவதால், இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக விமானப் பயணத்தில் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அதற்காக தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் விளக்கினர்.

முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக சலுகைப் பொதியை (பெகேஜ்) தயாரிக்குமாறும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் தலைமையில் இந்த விடயங்களை ஆராயவும் நிதி அமைச்சிற்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.ஜி. அபோன்சு, சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க ஆகியோருடன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை போன்ற துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *