மக்களைக் கைவிட்டால் மஞ்சள் நீலமாக மாறும்!; அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை

லாப் எரிவாயு நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்த வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த மாதம் மாத்திரம் 38 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
மத்திய கிழக்கு நாடுகளில் யுத்த பதற்ற நிலைமை ஏற்பட்டவுடன் நாட்டில் எரிபொருள், எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.
2026 ஆம் ஆண்டுக்கு மாத்திரம் 380,000 மெற்றிக்தொன் எரிவாயு தொகையை இறக்குமதி செய்வதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24000 மெற்றிக்தொன், பெப்ரவரி மாதம் 28000மெற்றிக்தொன் என்ற அடிப்படையில் எரிவாயு தொகை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 38000 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்யப்படவுள்ளது. இம்மாதம் 10 கப்பல்கள் ஊடாக எரிவாயு இறக்குமதி செய்யப்படும்.
லாப் தனியார் எரிவாயு நிறுவனம் தேசிய சந்தைக்கு முறையாக எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காத காரணத்தால் லிட்ரோ சிலிண்டருக்கான கேள்வி உயர்வடைந்துள்ளது.லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதாக தற்போது உறுதியளித்துள்ளது. 10 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயுவை அரச நிறுவனத்தின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு இந்த நிறுவனத்துக்கு வசதிகளை தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின்,அதன் மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும். நுகர்வோர் அதிகார சபைக்கு அதற்கான அதிகாரம் உள்ளது என்றார்.
![]()