‘ ஏக்கிய இராஜிய ‘அரசியல் அமைப்பை நிராகரிப்போம்; மன்னார் மாவட்ட சிவில் அமைப்புகள் தெரிவிப்பு

மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் மாவட்ட சிவில் அமைப்புகளுக்கும் தமிழ் தேசிய பேரவை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது..
இந்தக் கூட்டத்தில் மன்னர் மாவட்ட பிரசைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உட்பட பல சிவில் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த கலந்துரையாடலில் ‘ஏக்ய ராஜ்ய’ அரசியல் அமைப்பு நிராகரிப்பும் சமஸ்டி அரசியல் அமைப்பை வலியுறுத்துதல் தொடர்பாகவும் தலைவர் கஜேந்திரகுமாரால் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படையிலே ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட இருக்கிற 2015க்கும் 19க்கும் இடையில் தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள அரசியல் யாப்பு வரைபானது ஏக்கிய இராஜிய வரைபு என்பதும் அந்த ஒற்றையாட்சி வரைபின் ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் அந்த வரைவு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதற்கு மாற்றாக தமிழர்களுடைய அரசியல் தீர்வாக தமிழர்களுடைய தேசம் அதனுடைய இறைமை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு சமஸ்டி தீர்வை தமிழ் தரப்பு முன்வைக்க வேண்டிய நிலையில் அவ்வாறான ஒரு பொது வேலை திட்டத்தில் சிவில் அமைப்புக்களும் அரசியல் தரப்புக்களும் இணைந்து பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டது.
அங்கிருந்தவர்கள் அனைவரும் இந்த கருத்துக்களோடு முழுமையாக இணங்கிக் கொண்டார்கள்.
அத்துடன் கடந்த 15 2 2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் கோயில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிவில் அமைப்புகளும் அரசியல் தரப்புக்களும் ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த அரசியல் அமைப்பு யோசனையை திம்பு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பது என்றும் இணங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒரு பொதுச் சபையாக செயல்படுவதற்கும் இணங்கிக் கொள்ளப்பட்டது. என்ற விடயமும் தெளிவுபடுத்தப்பட்டது.
மன்னாரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கலந்து கொண்டவர்கள் இந்த பொதுச் சபையில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒற்றையாட்சியை (ஏக்யராஜ்ய) நிராகரித்து ஒரு சமஷ்டி யோசனையை முன்வைக்கவும் இந்த விடயத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தெளிவுபடுத்தவும் முன்வந்தார்கள்.
![]()