இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு: பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி நிறைவு

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி நேற்று சனிக்கிழமையுடன் (28) நிறைவடைந்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான 17 பேர் அடங்கிய நிபுணர் குழுவினால் சுமார் 11 மாதங்களாகத் தயாரிக்கப்பட்ட அவ்வரைவை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரும் நோக்கில் பகிரங்கமாக வெளியிடுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்திருந்தார்.

அதற்கமைய அப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு 2026 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து அவ்வரைவு தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினராலும் கூட்டாகவும், தனித்தனியாகவும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினத்துடன் இந்தக் கருத்தறியும் காலப்பகுதி நிறைவுக்கு வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *