இந்தியா

டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்

டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தது உரையாற்றும் போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மேலும் குறிப்பிடுகையில், மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மடைமாற்றம் செய்து விட்டதாக ஆட்சியை குறை சொல்லி, விமர்சனம் செய்துள்ளார். அதன் காரணமாகவே இந்த கூட்டத்தில் அரசியல் பேச வேண்டிய கட்டாயத்தில் பேசுகிறேன்.

குடிநீர் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி போதாததால், தமிழக அரசு 50 சதவீத நிதியை கூடுதலாக ஒதுக்கி அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில் எந்த அடிப்படையில் மடைமாற்றம் என்று குறை சொல்கிறார். தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை எந்த சிறப்புத் திட்டங்களையும் அறிவிக்கவில்லை, நிதியும் கொடுக்கவில்லை. மதுரையில் 10 பத்து ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

அது என்ன மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? என்று நேரில் சென்று அமித்ஷா பார்த்தாரா? ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், என பல திட்டங்களை செய்துள்ளோம்.

பாஜக அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? அதேபோல் மத்திய அமைச்சர் ஷெகாவத், கீழடி அறிவியல் ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று சொல்கிறார். 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இதையெல்லாம் தட்டிக் கேட்க எதிர்க்கட்சி தலைவராக இருப்பவருக்கு துணிச்சல் இல்லை.

மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக அவர் செயல்பட்டு வருகிறார். கண்டிப்பாக வரும் தேர்தலில் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *