ரணிலின் மனைவிக்கு பெருகும் ஆதரவு!; 85 பேர் கையெழுத்திட்டு அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியாரான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட கூட்டணி அதிருப்தி வெளியிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த கூட்டணி சார்பில் 85 பேர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது முன்னெடுக்கப்படும் விசாரணையின் தொடர்ச்சியாக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளமை தொடர்பில் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ள கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட கூட்டணி அதிருப்தி வெளியிட்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் விக்ரமசிங்க களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பிரிவு தலைவராகவும் மூத்த பேராசிரியராகவும் உள்ளார். மேலும் அவர் அந்த பல்கலைக்கழகத்தின் பாலின சமத்துவ ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநராகவும் உள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்துடன், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பாலின சமத்துவக் கொள்கை மேம்பாடு, பாலின உணர்திறன் பயிற்சி மற்றும் பெண்கள் மற்றும் பாலினத் திட்டங்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் அவர் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் அவரை விசாரணைக்காக அழைப்பது தொடர்பில் கவலை தெரிவிக்கின்றோம். பேராசிரியர் விக்கிரமசிங்கவின் தொழில்முறை சுதந்திரம், கண்ணியம் மற்றும் சேவைப்பதிவு எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()