இலங்கை

யாழில் அனுரகுமார பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தைமாதம் பொங்கல் தினத்தில் வட மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த நிலையில் அன்று மாலை வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அன்றைய தினமே மானிப்பாய் மருதடி ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

மறுநாள் யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் “முழு நாடுமே ஒன்றாய்” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கான நிதியை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பெடுத்த நிலையில் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து பெரும் எடுப்பில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுக்காக மண்டப ஒழுங்கமைப்பு சுமார் 52 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவும் சிற்றுண்டி உபசரணைக்காக சுமார் சுமார் 31 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் பங்கு பற்றிய பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 23 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாவும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளுக்காக சுமார் 51 ஆயிரத்து 700 ரூபாவாக செலவு காட்டப்பட்டுள்ளது.

வரவேற்பு செலவினமாக 23 ஆயிரத்து 375 ரூபாவும் , குடிநீர் மற்றும் மலசல கூடத்திற்காக சுமார் 36 ஆயிரம் ரூபாவும் , முன்னாயத்த வேலைகள் மறுசீரமைப்புக்காக சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவாகவும் ஏனைய செலவுகளுக்காக சுமார் 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவாகவும் செலவு காட்டப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் யாழில் தைப்பொங்கல் மறுநாள் இடம் பெற்ற ஒரு நிகழ்வுக்கு மாத்திரம் இவ்வாறு பாரிய ஒரு தொகை செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *