உலகம்

முட்டாள்கள் ; உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடுப்பில் டிரம்ப்; புதிய வரி விதிப்பு

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார்.

அதோடு நீதிமன்றத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று குறிப்பிட்ட அவர், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்தவர்களை “முட்டாள்கள்” என்று கடுமையாகச் சாடினார்.

கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அறிவித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் அறிவித்த சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்தத் திட்டத்தை வெளியிட்டார்.

6-3 என்ற விகிதத்திலான தீர்ப்பில், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயல்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றி என தெரிவிக்கப்படுகிறது.

இது பில்லியன் கணக்கான டொலர் வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைத் திறந்துள்ளதுடன், உலகளாவிய வர்த்தகச் சூழலில் புதிய நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய டிரம்ப், வரித் தொகையைத் திரும்பப் பெறுவது சட்டப் போராட்டமின்றி நடக்காது என சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுபறியாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதாக அவர் வாதிடும் இந்த இறக்குமதி வரிகளைத் தொடர, பிற சட்டங்களை நாடுவேன் என்றும் அவர் கூறினார்.

“எங்களிடம் மாற்று வழிகள் உள்ளன – சிறந்த மாற்று வழிகள், இதன் மூலம் நாங்கள் இன்னும் வலிமையடைவோம், என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அமெரிக்க உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளம்ை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *