கவிதைகள்

உவேசா உயிர் மூச்சு தமிழே!… கவிதை… ஜெயராமசர்மா

உத்தம தானபுரம் ஈன்றிட்ட முத்து
உவேசா என்றுமே தமிழுக்குச் சொத்து
தமிழ் அன்னை தவமைந்தன் அவரே
தமிழ் உலகில் வாழுகிறார் தமிழாய்

ஆங்கிலத்தை வட மொழியைப் பாரா
அன்னைத் தமிழ் அகமேந்தி நின்றார்
தூங்காமல் தமிழ் படித்துச் சுவைத்தார்
சுவைத் தனைத்தும் சொர்க்கமாய் கண்டார்

நல்ல தமிழ் ஆசானைக் கண்டார்
எல்லை இல்லா இன்பத்தை அடைந்தார்
கற்பவைகள் தேர்ந் தெடுத்துக் கற்றார்
கற்றபடி நடந்து அவரும் உயர்ந்தார்

நாம் படிக்கும் அத்தனையும் ஏடாய்
வீடெல்லாம் இருந்ததை நாம் அறியோம்
ஏடு தேடி ஊரெல்லாம் ஓடி
வீடிருக்கும் ஏடு கண்டு வியந்தார்

எங்கள் தமிழ் அத்தனையும் ஏட்டில்
தங்கியே இருந்ததை நாம் உணர்ந்தால்
உவேசா செய்த பணி உணர்வோம்
உயிர் கொடுத்து மீட்டார் தமிழனைத்தும்

கட்டை வண்டி கைகொடுக்க அவரும்
காடு மேடு சென்றலைந்து திரிந்தார்
எத்தனையே தமிழ் ஏட்டைக் கண்டார்
எடுத் தெடுத்து கையெடுத்து அணைத்தார்

ஏடு தேடி சென்றபோது எரித்தார்
ஓடு கின்ற ஆற்றினிலே விட்டார்
பாடு பட்டு அத்தனையும் தடுத்தார்
நாம் படிப்பதற்கு நூலாக்கித் தந்தார்

சங்கத் தமிழ் தமிழனது சொத்து
எங்கள் சுவாமிநாதன் மீட்டாரே நினைப்போம்
உவேசா என்று சொன்னால் உழைப்போ
உவேசா உயிர் மூச்சு தமிழே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *