மே 9 வன்முறைக்கு ஜே.வி.பி.காரணமல்ல; ராஜபக்ஷக்களே காரணம்

2022 மே 9 காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷக்களே தாக்குதல் நடத்தி வன்முறைகளுக்கு தூண்டினார்கள் என்றும், இந்த வன்முறையுடன் ஜே.வி.பியினரை தொடர்புபடுத்துபவர்களின் தலைகளை பரிசோதிக்க வேண்டும் என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நிகழ்வொன்றின் பின்னர் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
அலரி மாளிகையில் இருந்து வந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் ஜே.வி.பியினரா? அவ்வாறு கூறுபவர்களின் தலைகளை பரிசோதிக்க வேண்டும். அலரிமாளிகைக்கு குழுக்களை அழைத்துவந்து அவர்களின் தடிகளை கொடுத்து தாக்குதல் நடத்தியவர்கள், அந்த குற்றத்தை ஜே.வி.பி மீது சுமத்துவார்களாக இருந்தால் அவர்களின் தலைகள் எங்காவது மோதியிருக்கலாம். இதனால் தலைகளை பரிசோதிக்க வேண்டும்.
அமைதியான போராட்டத்தின் மீது ராஜபக்ஷக்கள் தாக்குதல் நடத்தி ஏற்படுத்திக்கொண்ட சம்பவத்தின் பின்னர் நடந்தவை என்ன? இந்த சம்பவங்களின் ஆரம்பத்தை பார்க்க வேண்டும். ஏதாவது குற்றங்கள் நடந்திருந்தால் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அந்த தீர்ப்புகளில் திருப்தியில்லை என்றால் மேன்முறையீடு செய்ய முடியும் என்றார்.
![]()