யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. ஆனந்தமயில் நித்திலவர்ணன் கல்வியல் துறைப் பேராசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் சி.ரகுராமன் மருத்துவபீட மகப் பேற்றியல் மற்றும் பெண் நோயியல்துறையின் பேராசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட நுண் நிதியியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.சசீலா பாலகோபி முகாமைத்துவ பீட நுண் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் சனிக்கிழமை (07) பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறையின் தலைவர் கலாநிதி.ஆனந்தமயில் நித்திலவர்ணனைக் கல்வியியல்துறையில் பேராசிரியாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் சி.ரகுராமன் மருத்துவபீட மகப் பேற்றியல் மற்றும் பெண் நோயியல்துறையின் பேராசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட நுண் நிதியியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.சசீலா பாலகோபி முகாமைத்துவ பீட நுண் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.
கலாநிதி.ஆனந்தமயில் நித்திலவர்ணன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணி நிலைகளிலும் தன் பங்களிப்பை நல்கியுள்ளதுடன் மிக இளவயதில் பேராசிரியராகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியில் துறையின் கல்வியியலாளர் எனும் தகமையையும் பெற்றுள்ளார்.
வைத்திய நிபுணர்.சிவலிங்கராஜா ரகுராமன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவமானி மற்றும் சத்திரசிகிச்சை மானிப் பட்டத்தைப் பெற்று அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப்பின் கற்கைகளுக்கான நிறுவனத்தில் மருத்துவக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர். இங்கிலாந்தில் வெளிநாட்டுப் பயிற்சியை நிறைவுசெய்ததன் மூலம் தகமைபெற்ற மகப்பேற்றியல் வைத்திய நிபுணராக அங்கீகரிக்கப்பட்ட இவர் கற்பித்தலில் நாட்டம் கொண்டு மருத்துவபீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழறிஞருமான பேராசிரியர். சிவலிங்கராஜாவின் ஏக புத்திரனான இவர் தற்போது சமுகப் பணிகளிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றார்.
![]()