இலங்கை

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது.

கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது.

கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது.

இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *