பலதும் பத்தும்

பாலியல், எய்ட்ஸ் நோய்களுக்காக 10,166 பேர் சிகிச்சை

நாடளாவிய ரீதியில் பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 41 நிலையங்களில் 10,166 பேர் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நாடளவிய ரீதியில் பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக பரிசோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் 41 நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4,771 பேரும், சிப்லிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1,469 பேரும், கொனோரியா (வெள்ளை துளி) நோயால் பாதிக்கப்பட்ட 1,035 பேரும், ஹெர்பிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 2,891 பேரும் சிகிச்சை அல்லது சேவைகளைப் பெறுகிறார்கள்.

பாலியல் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2025.11.06 ஆம் திகதி முதல் நிரந்தர பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.2025.12.31 ஆம் திகதி தரவுகளின்படி எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்தின் கையிருப்பு 4 மாதங்களுக்கு போதுமானதாகும்.

உலகளாவிய நிதியம், இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் ஆகிய தரப்பினரிடமிருந்து இந்த மருந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கின்றன. அவசர தேவைக்காக இந்த மருந்து சமீபத்தில் இலங்கை குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து பெறப்பட்டது.

எய்ட்ஸ் நோயாளர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகளை தொடர்ந்து வழங்குவதற்கு சுகாதார மற்றும் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் மருத்துவ விநியோக பிரிவுக்கு பொறுப்பு காணப்படுகிறது.தற்போது எய்ட்ஸ் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *