வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் தொடர்ந்தும் அழிக்கப்படும் பனை வளம்

யாழ் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள பனை மரங்கள் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய வீதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏராளமான பனை மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஒருவர் தனது காணியில் நிற்கும் பனை மரத்தைத் தறிப்பதாயின் பனை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றில் அனுமதி பெற வேண்டிய கட்டாயமிருக்கின்றது. எனினும், தமிழ்மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் எவரது அனுமதியுமின்றியும், காணி உரிமையாளர்களின் ஒப்புதல் எதுவுமின்றியும் பனைகளை அழித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காது பனை அபிவிருத்திச் சபை அமைதி காத்து வருவது தொடர்பில் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணி உரிமையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
![]()