இந்தியா

அஜித் பவாரின் மரணத்தில் மர்மம்! சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.

நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது.

எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.

இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.

உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத் கூறுகையில், “பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், “அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *