முச்சந்தி

இலத்திரனியல் போரில் ஈரான் : ஈரானில் முடக்கப்பட்ட எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானிய உள்நாட்டுப் பொறியாளர்களின் திறமையின் மூலம், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை முடக்கப்பட்டது. எத்தகைய செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தையும் முடக்கும் ஆற்றல் ஈரானியர்களுக்கு உண்டு என கூறப்படுகிறது. ஈரான் ஸ்டார்லிங்க் சிக்னல்களைத் தடுக்க சக்திவாய்ந்த ஜாமர்களைப் பயன்படுத்தியதுடன், இது செயற்கைக் கோள்களுடன் இணைவதைத் தடுத்தது)
47 ஆண்டுகால ஈரான் குடியரசு வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு ஆட்சி கவிழும் போராட்டத்தை அண்மையில் எதிர்கொண்டது. ஈரானில் கடுமையான உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்க, அந்நாட்டு அரசு இணைய சேவையை முழுமையாக முடக்கியது.
ஈரானில் இராணுவ ஆட்சி, அமெரிக்க பொம்மையாட்சி, ஜனநாயக ஆட்சி ஆகிய மூன்று முடிவுகளில் எதுவும் சாத்தியமாகலாம் என்ற நிலையும் இருந்தது. ஈரானில் பொருளாதாரச் சரிவு மற்றும் உணவுப் பொருட்களின் விண்ணைத் தொடும் விலை உயர்வுக்கு எதிராக 2025 டிசம்பர் 28 அன்று தொடங்கிய மக்கள் கொந்தளிப்பு, ‘ஜனவரி புரட்சி’ அல்லது ‘14 நாள் எழுச்சி’ என்ற பெயரில் ஒரு முழுமையான அரசியல் மாற்றத்திற்கான போராட்டமாக பரிணமித்தது.
190க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவிய இந்தப் போராட்டங்கள், வெறும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல என்பதும், அவை 1979 இல் உருவான ஆன்மீக அதிகார அமைப்பை வேரோடு பிடுங்கி எறிய முயன்ற தருணம் என்றும் மத்திய கிழக்கு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஈரானுக்குள் இஸ்ரேலின் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்றும், அவர்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் முக்கிய தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கின்றனர் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது. இதனையடுத்து ஸ்டார்லிங்க் இணைய சேவையை பயன்படுத்த சட்டப்படி தடை விதிக்கப்பட்டது. இதனையும் மீறி பயன்படுத்தினால் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்தது.
இணையச் சேவை முடக்கம்:
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த வேளையில், அங்கு முடக்கப்பட்டுள்ள இணையச் சேவையை மீண்டும் வழங்குவதற்காக எலோன் மஸ்கின் தொழில்நுட்ப உதவியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாடினார்.
ஈரானின் பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனை ஒடுக்கவும், போராட்டங்கள் குறித்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களுக்குக் கசிவதைத் தவிர்க்கவும் ஈரானிய அரசாங்கம் நாடு முழுவதும் இணையச் சேவையைத் துண்டித்தது.
இதனால் போராட்டக்காரர்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்தச் சிக்கலைத் தீர்ப்பது குறித்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை ஜனாதிபதி டிரம்ப் நடத்தினார்.
எலோன் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவை (Starlink Satellite Internet) மூலம் ஈரானில் இணையத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது.
ஏற்கனவே உக்ரைன் போன்ற போர்ச் சூழல் நிலவும் பகுதிகளில் ஸ்டார்லிங்க் இணையம் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ள நிலையில், ஈரானில் இந்த முயற்சி எடுக்கப்படுவது உலக அரசியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது.
கலவர காலத்தில் ஈரான் அரசாங்கம் ஒரு வீதம் என்ற மிகக் குறைந்த அளவிலான இணையத் தொடர்பை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதற்குப் போட்டியாக எலோன் மஸ்க் தனது ‘ஸ்டார்லிங்க்’ சேவையை ஈரானில் இலவசமாகச் செயல்படுத்த முயன்றார். முன்பை விட இம்முறை ஈரான் தொழில்நுட்ப ரீதியாகத் தன்னைத் தயார்படுத்தி அதனை இயக்க முடியாமல் செய்தது.
தடுக்கப்பட்ட ஸ்டார்லிங்க்:
உலகளாவிய நாடுகளில்’ஸ்டார்லிங்க்’ (Starlink) இணையத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற பிம்பத்தை ஈரான் உடைத்துள்ளது. ஸ்டார்லிங்க் மூலம் அனுப்பப்படும் தரவுகள் (Data packets) ஈரானின் பல பகுதிகளில் எண்பது வீதம் வரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் உறுதி செய்தனர்.
மேலும் ஈரான் தனது வான்வெளியில் சுமார் 5,000 கி.மீ சுற்றளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன Military-grade Jammers களை பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெறும் சிக்னல் தடங்கல் மட்டுமல்ல, செயற்கைக் கோள்கள் மற்றும் தரைத்தள முனையங்களுக்கு இடையிலான அதிர்வெண்களை (Frequencies) முற்றிலுமாக மறைக்கும் ஒரு இலத்திரனியல் தடுப்பு போர்வை (Electronic Shield) என்று வர்ணிக்கப்படுகிறது.
ஈரானில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை அரசின் இணைய முடக்கங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டாலும், ஈரான் அரசு ராணுவ தர ஜாமர்களைப் பயன்படுத்தி அதைத் தடுத்தது.
ஆனாலும் தீவிர கலவர நேரத்தில் சில பகுதிகளில் சேவை துண்டு துண்டாகக் கிடைத்தது. மேலும் ஸ்டார்லிங்க் கட்டணங்களை நீக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. ஈரானிய அரசாங்கத்திற்கு சவாலாக இருந்துடன், ஸ்டார்லிங்க் பயன்பாட்டை சட்டவிரோதமாக்கி, அதனை முடக்க ராணுவ தர ஜாமிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.
இணைய முடக்கத்தின்போது, ஸ்டார்லிங்க் போராட்டக்காரர்களுக்கு வெளி உலகத்துடன் இணைவதற்கான முக்கிய வழியாக மாறியது. அத்துடன் SpaceX நிறுவனம் ஈரானில் ஸ்டார்லிங்க் சந்தா கட்டணங்களை நீக்கியது. டெஹ்ரானில் ஸ்டார்லிங்க் உபகரணங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், சுமார் 50,000 சாதனங்கள் கடத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை ஈரான் அரசு Kill Switch ஜாமிங் மூலம் Elon Musk-ன் Starlink இணையத்தை முடக்கியது. போராட்டங்களை ஒடுக்க ராணுவ தரத்திலான தொழில்நுட்பம் பயன்படுத்தியது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணையச் சேவையைத் துண்டிக்கும் வகையில் “கில் ஸ்விட்ச்” களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பொறியாளர் திறமை:
இந்தத் தடுப்பு நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யா அல்லது சீனாவின் தொழில்நுட்ப உதவி இருக்கலாம் என்று மேற்குலக நாடுகள் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் இது ஈரானிய உள்நாட்டுப் பொறியாளர்களின் திறமையின் மூலம் உருவாக்கப்பட்டது. எத்தகைய செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தையும் முடக்கும் ஆற்றல் ஈரானியர்களுக்கு உண்டு என கூறப்படுகிறது.
ஈரான் ஸ்டார்லிங்க் சிக்னல்களைத் தடுக்க சக்திவாய்ந்த ஜாமர்களைப் பயன்படுத்தியதுடன், இது செயற்கைக்கோள்களுடன் இணைவதைத் தடுத்தது. ஈரான் அரசாங்கம் ஸ்டார்லிங்க் டிஷ்களைத் தேடிப் பிடித்து பறிமுதல் செய்ததுடன், குறிப்பாக போராட்டங்கள் நடந்த பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது.
தற்போது ஈரானில் சேவை முற்றிலுமாக முடக்கப்படவில்லை. சில பகுதிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், ‘பேட்ச்’ ஆக (patchy) கிடைக்கிறது. ஈரானிய அரசு ஸ்டார்லிங்கின் சிக்னல்களைத் தடுத்து, அதை முடக்க முயற்சிக்கும்போது, SpaceX கட்டணங்களை நீக்கி உதவுவதால், இது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இன்னமும் உள்ளது.
தற்போது ஈரானில் கலவரம் அடக்கப்பட்டாலும், இணையச் சேவை மீண்டும் கிடைப்பது ஈரானியப் போராட்டக்காரர்களின் குரலை உலகிற்கு உரக்கச் சொல்ல உதவும் என்று நம்பப்படுகிறது. ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *