வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கிவுல்ஓயா திட்டத்தால் பூர்விகமாக வாழும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீதான எமது மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகச் செய்யும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கோடீஸ்வரன் எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கிவுல்ஒயா திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டில் மகாவலி எல் வலயம் என்று சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இந்த பிரதேசத்திற்கு மகாவலி நீரை கொண்டுவர முடியாது என்பதனால் ‘என்பிசி கெனல்’ ஊடாக மகாவலியை கொண்டு வருவதாகக் கூறி 2 இலட்சம் ஹெக்டேயர் நிலங்களை அபகரித்து அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். இப்போது அங்கு மக்கள் தொகை அதிகரித்து நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நீர்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 2011ஆம் ஆண்டில் இந்த கிவுல்ஓயா திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் 27,000 மில்லியன் ரூபாவை செலவிட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்படுகின்றது. இதன்படி புதிதாக வயல் நிலங்களை உருவாக்கவும் இதன்போது இன்னும் மக்களை குடியேற்றவும் திட்டமிடப்படுகின்றது.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இது எமது பிரதேசத்திற்கு பாதிப்பாக அமையும். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேசத்திற்குள் இது வருகின்றது. இதற்காக 2021ஆம் ஆண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு மேலதிமாக 13,000 ஏக்கர் நிலத்தை வனபாதுகாப்பு திணைக்களம் இதற்காக வழங்குகின்றது. ஆனால் எமது மக்களின் பூர்விக நிலங்களை பயன்படுத்த வனபாதுகாப்பு திணைக்களம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வவுனியா மற்றும் முல்லைதீவில் பூர்விகமாக வாழும் மக்களுக்கு நீரில்லை. இதனை கவனிக்க எவருமில்லை. கடந்த அரசாங்கத்தை போன்று சிறுபான்மையினவரின் வாழ்வுரிமையை பறிக்க நீங்களும் முயற்சிக்கின்றீர்களா? பாரிய நீர்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவதும், பெரும்பான்மை மக்கள் அங்கு குடியேற்றப்படுவதையும் தொடர விரும்புகின்றீர்களா? இனவாதம், மதவாதம் அற்ற அரசாங்கத்தை கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் வீணடிக்கப் போகின்றீர்களா? என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
![]()