முச்சந்தி

போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம் – முத்து நகர் விவசாயிகள் எச்சரிக்கை

எமது விவசாய நிலங்களுக்கான முறையான தீர்வினை அரசு வழங்காவிட்டால், இடைநிறுத்தப்பட்ட போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம் என திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் அரசாங்கத்திற்குப் பாரிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமது வாழ்வாதார நிலங்கள் பறிபோனது குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

முத்து நகர் பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள், தனியார் நிறுவனங்களின் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை எதிர்த்து, திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விவசாயிகள் சுமார் 70 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

எனினும், அண்மையில் வீசிய ‘திட்வா’ புயல் காரணமாக இந்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது.

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்:

நாங்கள் விவசாயத்தையே எமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டதால் 352 விவசாய குடும்பங்கள் இன்று பொருளாதார ரீதியாகக் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. எமது 800 ஏக்கர் காணிகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி தாரை வார்த்துள்ளனர்.”

விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, அவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

இதற்காக நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் தகவல்கள் திரட்டப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்குச் சொந்தமான நிலங்களை மீள வழங்க வேண்டும் அல்லது தகுந்த மாற்று வழியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில் மீண்டும் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *