காரமுனை என்பது தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசமாகும் ; முஸ்லிம்களுக்கு உரிய பகுதியல்ல

காரமுனை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பிரதேசமாகும் என்றும், இதனை முஸ்லிம்களின் பிரதேசம் என்று ஹிஸ்புல்லா எம்.பி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த பிரதேசம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் ஆராயாமல் பாராளுமன்றத்தில் திட்டங்களை கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடை,அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனைத்தையும் உறுதிப்படுத்தும்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சாணக்கியன் எம்.பி இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட சக பாராளுமன்ற உறுப்பினரான ஹிஸ்புல்லா காரமுனை நிலம் தொடர்பில் இந்த சபையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். காரமுனை என்பது தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் வாழ்ந்ததாகவும் அவர்களின் சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரிகள் மீது பழி சுமத்துவது மிகவும் பிழையான விடயமாகும். 2023ஆம் ஆண்டில் பெரும்பான்மை சமுகத்தை இந்த பிரதேசத்தில் குடியேற்ற வந்தபோது, நான் அவ்விடத்தில் இருந்து அந்த காணி ஆணையாளர்களையும், இராணுவ அதிகாரிகளையும், பெரும்பான்மை சமூக சகோதரர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தோம். அந்த நேரத்தில் காரமுனையை பாதுகாக்க இந்த ஹிஸ்புல்லா வரவில்லை.
தற்போது நான் அரச அதிகாரிகளுடன் பேசிய போது, வாகரை வடக்கு மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர். அந்த மக்களுக்கு மாற்றுகாணிகள் சில இடங்களில் வழங்கியிருந்தால், மாற்றுக் காணிகளை வைத்துக்கொண்டு பூர்வீக இடங்களையும் கேட்பது நியாயமில்லை என்று கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் காரமுனை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பிரதேசம். இது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் ஆராயாமல், பாராளுமன்றத்தில் இது தொடர்பான திட்டங்களை கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது என்றார்.
![]()