கட்டுரைகள்

தமிழன் அன்று சீனாவில் வணிகம்!…  தமிழன் இன்று சீனாவில் பயணம்!!…  தொடர்- 08….. சங்கர சுப்பிரமணியன்.

சங்கர சுப்பிரமணியன்

வாகன ஓட்டியின் தவறால் குறித்த நேரத்துக்குள் போய்விடுவோமா என்ற சந்தேகம் வலுத்தது. நான் கடவுளையும் வேண்டமுடியாது. இவ்வளவு நாளாக கடவுள் இல்லையென்று சொல்லிவிட்டு காரியம் ஆக கடவளை வேண்டினால் வச்சு செஞ்சுடுவார். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையே செல்வந்தர்களை ஒருமாதிரியும் ஏழைகளை ஒருமாதிரியும் தானே கடவுள் பார்க்கிறார்.

என் நண்பர் ஒருவர், ஒரு பங்கு கொடுத்தால் பத்து பங்கு கொடுப்பாராம் ஒரு கடவுள் என்றார். இல்லாதவன் ஒரு ரூபாய் கொடுத்தால் பத்து ரூபாய்தான் கொடுப்பார். அதுவே இருப்பவன் ஒரு லட்சம் கொடுத்தால் பத்து லட்சம் கிடைக்குமாம். உண்மை இல்லாமலா தங்கம், வைரம், வெள்ளி பணம் என்று எல்லாவற்றையும் கொட்டுகிறார்கள். இல்லாதவர்களுக்கு கொடுப்பதே நியாயம். நம்மைக் காப்பவருக்கு நாம் கொடுப்பது என்ன நியாயமோ?

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை ஊருக்காக கொடுத்தான் என்ற பாடலை எல்லாம் கேட்டுவிட்டு தேவைப்படாத ஒருத்தருக்கு கொடுப்பதில் என்ன நியாயம்? இது யார் குற்றம்? படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன் மேல் பாவமில்லை. கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார். உழைத்தவர்கள் தெருவில் நின்றார் என்று படகோட்டி படத்தில் எம். ஜி. ஆர் பாடிய
பாடல் வரிகள் சரியாகத்தான் உள்ளன.

என்ன கொண்டு வந்தாய் எதை எடுத்துக் கொண்டு போவாய் என்று கடவுளே சொல்லியிருக்கிறாரே என்று கொடுப்பவர்களிடம் சென்று சொல்லமுடியுமா? கடவுள் இவற்றையெல்லாம் எங்கு எடுத்துக்கொண்டு போவார்?

கடவளைப் பற்றி அதிகம் பேசுபவர்கள் அதிலும் தமக்கு மட்டும்தான் அதிகபக்கி இருப்பதாக காட்டிக் கொள்பவர்களுக்கு
ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். ஒரு கோவிலில் உண்டியலில் வரும் பணத்தை எண்ணி கணக்கெடுப்பவர்கள் எந்த அளவுக்கு பக்திமான்களாக இருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அப்படிப் பட்ட பக்திமானில் ஒருவர்தான் நூறுகோடி ரூபாயை திருடியிருக்கிறார்.

இப்படி பணத்தை எண்ணி கணக்கு எடுப்பவர்களை பகவான் ஒருமுறை வந்து கண்காணிப்பாராம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன பயன்? கடவுள் கண்டு பிடிக்கத் தவறியதை கண்காணிப்பு காமிரா கண்டுபிடிக்க பக்திமான் ஒத்துக் கொண்டார்.
ஆனால் மாடசாமி அண்ணாச்சி ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார். கடவுள் நேரில் வரமாட்டாராம்.

கண்காணிப்பு காமிரா மூலமாக வந்து காட்டிக் கொடுத்திருக்கிறாராம். நம்பும்படியாகவா இருக்கிறது? அப்படியானால் இலங்கையில் குண்டுகளைப் போட்டு மக்களை கொன்று குவித்தபோது நேரில் வராமல் ஒரு வல்லரசு மூலமாகாவாவது தடுத்திருக்கலாமே? இதைத்தான் கேட்பவன் கேணயன் என்றால் கேழ்வரகில் நெய் வடியும் என்பதோ?

திருடியவரையும் குறை சொல்லமுடியாது. பகவான் தானே சொல்லியிருக்கிறார். எதை கொண்டு வந்தாய் எதை எடுத்துச் செல்லப் போகிறாய்? என்று. அவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் நிலையாமையை போதித்த இறைவனுக்கே பொன்னையும் பொருளையும் கொடுப்பது தவறல்லவா?

“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே,
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே!

பதறிப் பதறி நின்று கதறிப்புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப் பெண்ணே,
பயன்பட்டு வருவானொ ஞானப்பெண்ணே!

என்று தங்கப்பதுமை படத்தில் சிவாஜிகணேசன் கதறிப் புலம்பியதைப் போல பக்தர்கள் கொடுத்ததில் எடுத்தவர் புலம்பினார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் யார்? எல்லாம் அவன் செயல் என்றால் இதுவும் அவன் செயல்தானே? அந்த கடவுள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும். செய்தால் இதுபோன்ற திருட்டு எல்லாம் நடக்கவே செய்யாது. செய்வாரா?

எதைக் கொண்டு வந்தாய் எதைக் கொண்டுபோக போகிறாய் என்ற அவர் கூற்றுக்கு அவரே முன்னோடியாக நின்று “இனிமேல் இக்கோவிலில் பொன் பொருள் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது” என்று அறிவிப்பு செய்யுமாறு யார் கனவிலாவந்து சொல்லவேண்டும். கனவில் வரமாட்டார் என்று சொல்லவும் முடியாது. இதற்கு முன் கடவுள் கனவில் வந்ததாக படித்திருக்கிறோம் அல்லவா?

அதெல்லாம் பெரிய இடத்து விசயம். சரி, கட்டுரைக்குள் நாம் செல்வோம். நல்லபடியாக ரயில்நிலையம் வந்தோம். எதிர்பார்த்ததைவிட கால்மணி நேரம் அதிகமானது. முதல் நாள் வேறு வழியாக ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறியபோது தெரிந்த பிரம்மாண்டத்தைக் காட்டிலும் இப்போது அதன் அமைப்பு என்னை பிரமிக்க வைத்தது.

ரயில் நிலையமா? அல்லது விமான நிலையமா? என்று சொல்ல முடியாதபடி ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் இருந்தது. ஏற்கனவே கொஞ்சம் தாமதமாகி விட்டதால் வேகமாக சோதனைகளை எல்லாம் முடித்து தங்கும் இடத்தில் வந்து அமர்ந்தோம். இருபது நிமிடங்களில் அறிவிப்பு வந்தாலும் வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்பட்டு காத்திருந்தோம். புல்லட் ட்ரெயின் வந்ததும் ஏறி ஒருவழியாக பீஜிங் வந்தடைந்தோம்.

அடுத்தநாள் நாங்கள் மிகவும் எதிர்பார்த்த சீன நெடுஞ்சுவர் பயணம். இதற்கு பீஜிங்கில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும். நாங்கள் சுற்றிப்பார்த்த இடங்கள் யாவற்றையுமே தனியாகவே சென்று சுற்றிப்பார்த்தோம். சுற்றுலா வழிகாட்டியின் உதவியை நாடவில்லை. காரணம் எதையும் நிதானமாகப் பார்க்கமுடியாது. கூட்டமாக ஒருவர் கொடியைப் பிடித்தபடி முன் செல்வார் அவரைப் பின்பற்றிச் செல்லவேண்டும்.

இப்படி பல வழிகாட்டிகள் பலரை அழைத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாகச் செல்வார்கள். ஆதலால் கொடியையும் நாம் வந்த கூட்டத்தையும் தவறவிடாமல் கவனித்தபடியே செல்லவேண்டும். கோவிலுக்கு எதற்கு செல்கிறோம். ஆண்டவனை கண்டுகளிக்க அல்லவா? அப்படியிருக்க அவனிடம் முழுமனதாக ஈடுபாடு செலுத்தாமல் அன்னதானம் முடிந்து போகுமோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தால் எப்படி?

அன்னதானம் என்றதும் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது? மறந்து போவதற்கு முன் சொல்லிவிட வேண்டும். நானும் சில சமயங்களில் ஆலயம் செல்வேன். அவரிடம் எனக்கு பகையா என்ன? என் கருத்து வேறு. அதற்காக அவர் ஏன் வந்தாய் என்று
கோபித்துக் கொள்ளவும் மாட்டார். சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. என்றுமில்லாத் திருவிழாவாக காட்சி தருகிறது.

ஏன் தெரியுமா? அன்று போனால் சொர்க்கம் கிடைக்கும். அப்போதுதான் நம் மூதாதையர் பழமொழி எதையும் சும்மா சொல்லிவிட்டுச் சென்றுவிடவில்லை என்ற உண்மை தெரியும்.
முதலில் பழமொழியைச் சொல்கிறேன். சோறுகண்ட இடம் சொர்க்கம் என்பதே பழமொழி. அன்னதானத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். அன்னதானம் நடக்கும் நாட்களில் கோவிலில் வந்து குவியும் கூட்டத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.

நம் ஊர் என்றால் பரவாயில்லை. ஏழைமக்கள் அதிமிருப்பதால் ஒருவேளை சோறு கிடைக்கிறதே என்று வருவார்கள். ஆனால் பணக்கார நாடுகளில் மிகவும் வசதி படைத்தவர்கள் கூட வருகிறார்களே என்று எண்ணுவேன். அப்போது சோறுகண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வந்தது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *