இலங்கை

சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே டக்ளஸ்

“ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கையின் ஆகப் பெருங்குற்றவாளிகளில் முதன்மையானவராவார். அவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“டக்ளஸ் தேவானந்தா, உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் கொலைகள் உட்பட குற்றங்களைச் சாவகாசமாகச் செய்த சர்வதேசக் குற்றவாளி.

அவருக்கு எதிராக சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது.

அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி, அவர் ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மட்டுமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம்.

மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ அவர் வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, அக்காலத்தினுள் அக்கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் ஜே.வி.பி. – என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *