முச்சந்தி

காற்றின் தரம் மோசம்; யாழிலும் புத்தளத்திலும் முகக்கவசம் அணியவும்

இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 48 முதல் 112 வரை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் (100–108) மற்றும் புத்தளம் (104–112) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ (Slightly Unhealthy) மட்டத்தில் இருக்கும்.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் காற்றின் தரச் சுட்டெண் மிகக் குறைந்த அளவாக 46ஆக பதிவாகியுள்ளது.

மேலும் காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 3 முதல் 5 மணி வரையும் காற்றின் மாசு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது.

இவை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாசு அதிகம் உள்ள நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும், தேவையேற்படின் முகக்கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *