6 நாட்களில் 3 துப்பாக்கிச் சூடுகள்; அனர்த்தத்திலும் தொடரும் மோதல்கள்

டிட்வா சூறாவளியால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் உயிரிழப்புகளால் நிலவும் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்த நிவாரணப் பணிகளில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கவனம் செலுத்துவதைப் பயன்படுத்தி, சில பாதாள உலகக் குழுக்கள் தமது குற்றச் செயல்களை அதிகரித்து வருகின்றன.
டிசம்பர் 1 முதல் 6 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸாரின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 110 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வருடத்தின் மொத்த சம்பவங்களை (103) விஞ்சியுள்ளது.
இதில் பெரும்பாலானவை (83) போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையேயான மோதல்கள் ஆகும்.
பொலிஸ் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர், “அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கையில் குற்றத் தடுப்பு முயற்சிகள் ஒருபோதும் தடைப்படாது,” என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன், அனர்த்தத்தைப் பயன்படுத்த முயல்பவர்களை அடையாளம் கண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
![]()