பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்

இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்படுகின்றன.

உயிர் நீத்த போராளிகளின் உருவப்படங்கள் மற்றும் பெயர் தாங்கிய கல்லறைகளின் மாதிரிகள் வைக்கப்பட்ட நினைவுக் கூடங்களில், தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, அஞ்சலிச் சுடர்கள் ஏந்தப்பட்டன. இந்நிகழ்வுகள் பல்வேறு தமிழ் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுகள் இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் பிரித்தானியாவில் சட்டத்திற்கு உட்பட்ட விதிகள் மற்றும் அமைதியான முறையில் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்நாளை துக்கம், துணிவு மற்றும் உறுதிப்பாட்டுடன் நினைவுகூருவது ஒரு அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாகும் என ஸ்ட்ராட்போர்ட் மற்றும் பவ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார்.

பல தசாப்தங்களாகத் தமிழ்க் குடும்பங்கள் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஆண்டில், பிரித்தானியத் தொழிலாளர் அரசாங்கம் முதன்முறையாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளது; இது நீதி நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும், ஆனாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் ஒரு சுதந்திரமான வழக்குத் தொடுநரின் அலுவலகத்தை நிறுவுவதற்கான அழைப்பை UK அரசாங்கம் ஆதரித்திருப்பதை அவர் வரவேற்பதாகவும், கண்ணியம் மற்றும் உரிமைக்காகப் போராடுபவர்களுக்குத் தொடர்ந்து மரியாதை செலுத்துவதாகவும் உமா குமரன் MP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


![]()