கதைகள்

நடுகைக்காரி 84…. ஏலையா க.முருகதாசன்

நீ ஏன் அப்படிக் கேட்கிறாய் அவள் எனது வீட்டு மருமகள், உன்ரை அம்மா என்ன கல்நெஞ்சுக்காரியென்று நினைச்சாயா.என்ன இருந்தாலும் சரி பிழைகளுக்கப்பால் அவள் எனது மகளுக்குச் சமன்.
-சி.தனபாக்கியம்

தனது மகனுக்கு மருமகளாக வந்தவள் ஒரு பட்டதாரி ஆனால் அவளின் படிப்புக் காரணமோ என்னமோ தெரியாது தனது மருமகள் சிலம்பரசி யாரையுமே மதிப்பதில்லை,தனக்குப் பிடிக்கவில்லையென்றால் எவராக இருந்தாலும் எடுத்தெறிந்து பேசுவது என அவளின் குணத்தால் ஊருக்குள் பலரும் பலவிதமமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

போயும் போயும் உன்ரை மோன் பொம்பிளை கிடைக்காமல் அவளைப் போய் விரும்பினவனே,சிலம்பரசியின்ரை தாயே ஒரு வாய்க்கார,p பிள்ளை அதுமாதிரித்தானே இருக்கும் சும்மாவே சொன்னவை தாயைப் போல பிள்ளை நூலைப் போல சீலையென்று விடுப்புக் கதைப்பவர்கள் சும்மா மெல்லற வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி கதைச்சு எரியிற நெருப்பிலை எண்ணை ஊற்றி விசிறி விடுகிற மாதிரி முருகதாசனின் தாயாருக்கு நேரிலையும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

நாலுபேர் சேர்ந்து ஒரு வீட்டில் கூடி ஊர்க்கதை கதைக்கும் போது பாக்கு வெத்திலைத் தட்டத்தை முன்னுக்கு இழுத்து பாக்குவெட்டியால் பாக்கைச் சீவிக் கொண்டே உந்த அடங்காப் பிடாரியை இவன் எங்கைதான் பிடிச்சானோ தெரியாது, அந்தச் சிலம்பு நடந்து போகேக்கை கவனிச்சனியே அர்ஐ ஆர் கோழி மாதிரி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போறவள்,ஏதோ இவள் மட்டுத்தான் யூனிவர்ட்டியில் படிச்ச மாதிரியும் உங்கை வீட்டுக்கு வீடு இப்ப உதுதானே படிப்பு என்று செல்லக்கிளி கப்பிலை சாய்ந்து கொண்டு மனோன்மணிக்குச் சொல்ல மனோன்மணி தான் புத்திசாலி என்று காட்ட,அக்கா அது யூனிவர்ட்டியில்லை யூனிவர்சிட்டி என்று சொல்ல என்ன ஒரு சி னா இல்லாட்டி இப்ப என்ன குறைஞ்சா போச்சுது உங்கை பொடி பொட்டையள் எல்லாரும் யூனி யூனி என்றுதானே கதைக்கினம்,நானும் அதைக்கேட்டு தெல்லிப்பழைச் சந்தியிலை இருக்கிற யூனியன் கொலிஜ்ஜாக்கும் என்று நினைச்சன் என ஊரிலை வீட்:டுக்கு வீடு தனது மருமகளைப்பற்றி கண்டபடி கதைக்கிறதை அறிஞ்சும், என்ன இருந்தாலும் நாலுபேர் பல்லுக்கு மேலே நாக்கைப் போட்டு கதைச்சாலும் சிலம்பரசி என்ரை மகனின்ரை பெண்சாதி,என்ரை வீட்டு மருமகள் என்று எல்யலாவற்றையும் கேட்டும் கேளாதமாதிரி இருந்துவந்தாள் முருகதாசனின் தாய் தனபாக்கியம்.

இதுவரை காலமும் தன்னுடைய படிப்பின் மீதான அகந்தையாலும் மற்றையவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற திமிருடன் இருந்தவளை எஸ்.எஸ்.சயில் p படிக்கிற ஒருத்தி வந்து அடக்கிவிட்டாளே என்பதை சிலம்பரசியால் சீரணிக்க முடியவில்லை.
அது தனது சுயமரியாதைக்கு வந்த அவமானம் என்பதால் அந்த அவமானம் பீறிட்டுக் கொண்டு அழுகையாக மாறி தாயின் மடியில் தலை வைச்சுப் படுத்து தன்னை ஆறுதல்படுத்திக் கொள்வது போல மாமியாரின் தோளில் தலை வைச்சு மாமி மாமி என குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவளின் முதுகை ஆதரவாக தடவிய மங்களேஸ்வரியினதும் முருகதாசனினதும் தாயார் தனபாக்கியம் அழாத பிள்ளை,சரி நடந்தது நடந்து போச்சுது;அதை நினைச்சு மண்டையைப் போட்டுக் குழப்பாதை.வாழ்க்கையிலை இப்படிப் பல விசயங்கள் நடக்கும் என்று சிலம்பரசியின் முதுகைத் தடவியவள் அவளின் முகத்தை மெதுவாக நிமிர்த்தி இஞ்சை என்னைப் பார்,இதுக்கெல்லாம் வெதும்பலாமா நீ படிச்சவள்,துணிஞ்சவள் என்றும் அறிஞ்சன் அழாதை என்று தனைது சீலைத்தலைப்பை எடுத்து மருமகளின் கண்கள் இரண்டையும் துடைத்துவிட,ஜி எம் என்னை ஒரு கிழமைக்கு வேலைக்கு வரவேண்டாமென்று கடிதம் தந்திட்டார் அதை நினைச்சால்தான் மாமி அவமானமாக இருக்குது எல்லாம் அவளாலையும் இவற்றை பிரண்டாலையுந்தான் வந்தது என்று அழுகையிலிருந்து கோபத்துக்கு மாறியவள் கோபத்துடன் சொல்ல,அதுக்கென்ன எங்கடை வீட்டுக்கு வா பிள்ளை, ஒரு கிழமைக்கு எங்கடை வீட்டிலை ஆறுதலாக இருக்கலாம் எனச் சொல்லிய தனபாக்கியம்,கொஞ்சம் தள்ளி நின்ற மகனைக் கூப்பிட்டு பிள்ளையை நான் எங்கடை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போறன்,பிள்ளை மனதால் குழம்பிப் போய்க் கிடக்குது என்று தாய் செ4hன்னதும், தனது தாயார் தனது மனைவியை தங்களுடைய வீட்டில் அடுக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த முருகதாசனுக்கு,தனது மனைவியை வீட்டுக்குக் கூட்டிக் கொண்ட போறன் என்று தாய் சொன்னதும் அதை அவன் எதிர்பார்க்கவில்லை.உங்கடை வீட்டுக்கா என மகிழ்ச்சியை மறைத்து ஆர்வத்துடன் கேட்கிறான்.தனது மாமியார் எடுத்த முடிவை சிலம்பரசியாலும் நம்பமுடியவில்லை,மெதுவாக வெதும்பிக் கொண்டே கண்களைத் துடைச்சபடி நன்றி மாமி என்கிறாள்.

நீ ஏன் அப்படிக் கேட்கிறாய் அவள் எனது வீட்டு மருமகள்,உன்ரை அம்மா என்ன கல்நெஞ்சுக்காரியென்று நினைச்சாயா.என்ன இருந்தாலும் சரி பிழைகளுக்கப்பால் அவள் எனது மகளுக்குச் சமன.; நீ வேலையை முடிச்சுப் போட்டு எங்கடை வீட்டை வர் அங்கைதான் நீங்கள் இரண்டுபேரும் ஒரு கிழமைக்கு நிற்பியள் என்று சிலம்பரசியை ஆதரவாக தாயார் அழைத்துக் கூட்டிக் கொண்டு போக,தான் எதிர்பார்க்காத சம்பவம் நடந்ததை சீரணிக்க முடியாமல் கண்கள் முட்டிய ஆனந்தக் கண்ணீருடன் அலுவலக் கட்டிடத்துக்குள் போகும் கதவை நோக்கி கண்ணீரைத் துடைச்சபடி முருகதாசன் போவதைக் கண்ட மங்களேஸ்வரி தாயிடமும் அண்ணியிடமும் அண்ணை அழுகிறார் போல கண்களைத் தடைச்சபடி போகிறார் எனச் சொல்கிறாள்.

மகனைத் திரும்பிப் பார்த்த தாய் தனபாக்கியம் மகன் கட்டிடக் கதவுக்குள் நுழையும்வரை தாமதித்து நிற்கிறாள்.

ஒரு இக்கட்டான சம்பவம் நடக்கும் போதுதான் அது தொடர்பான பல சம்பவங்கள் நினைவுக்கு வரும்.சிலம்பரசி முருகதாசனின் தாய் வீட்டுக்கு போகாமல் விட்டதற்குக் காரணம் தன்னை ஏற்றுக் கொள்வார்களோ இல்லையோ என்ற தயக்கமே.

ஆனால் தனது மருமகள் நொடிந்து நெகிழ்ந்து அவமானப்பட்டுப் போய் நிற்கிறாள் என்ற போது எந்த மாமிமாருமே சும்மா இருக்கமாட்டார்கள்.நீ யாருமற்ற அநாதையல்ல நாங்கள் இருக்கிறோம் என அவளை அரவணைத்து அழைத்துச் சென்று கொண்டிருந்தாள் தனபாக்கியம்.
மகாஜனக் கல்லூரியின் மேற்குப் பக்கத்தில் உள்ள வித்துவான் கதிரிப்பிள்ளை ஒழுங்கையில்தான் சிதம்பரப்பிள்ளை தனபாக்கியத்தின் வீடு இருந்தது.

ஒழுங்கையில் போவோர் வருவோரைப் புதினம் பார்ப்பதும் அவர்களை மறித்து போவோரைத் துலைக்கோ போறியள் என்போரும் வருவோரை துலையாலையோ வாறியள் என்போரும் இருக்கத்தான் செய்வார்கள்.

அந்த ஒழுங்கைக்கருகிலும் அப்படியானவர்கள் இருந்தார்கள்.தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கப் புடவைக்கடையில் துணிகள் மலிவு விலைக்குப் போடுகிறார்கள் என்பது ஊரெங்கம் காட்டுத்தீ போல பரவியிருந்தது.

தான் துணி வாங்கப் போறெணெண்டு ஒழுங்கையடியில் இருந்த இரண்டொருவருக்கு தனபாக்கியம் சொல்லியிருந்தாள்.

துணி வாங்கப் போன தனபாக்கியத்தையும் மோளையும் இன்னும் காணேலையே வந்தால் துணிகளின் நட்டநயத்தை விசாரிக்கலாம் என குசுனிக்குள் சமையல் வேலையைச் செய்வதும்,முருங்கங்காயை வெட்டித் துண்டு துண்டாக எடுத்து வார்ந்த தோலையும் வெட்டிய துண்டுகளையும் கையில் பொத்திப் பிடித்தபடி குசுனிக்குள்ளிருந்து விறாந்தைக்கு வந்து வேலி மேல்மட்டத்துக்கப்பால் தனபாக்கியத்தின் தலை தெரிகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்த நாகம்மாவின் பார்வையில் வேலிக்கு மேலால் மூன்று தலைகள் தெரிய,இது என்ன தனபாக்கியமும் மோளுந்தானே கடைக்குப் போனவை இப்ப என்ன மூன்று தலை தெரியுது அதுவும் நல்ல தொகையான மயிருடன் தலை, தலையைப் பார்த்தாள் உயரமான பொம்பிளை போல, யாராக இருக்கும் என நாகம்மா யோசிச்சுக் கொண்டிருக்க,நாகம்மாவின் படலையடியில் தனபாக்கியம்,மங்களேஸ்வரி,சிலம்பரசியின் உருவங்கள் தென்பட ,அதில் சிலம்பரசியை அவர்களுடன் எதிர்பார்க்கவில்லையாதலால்,அக்கா நில்லுங்கோ என்று சொல்லிக் கொண்டே படலையடிக்கு வேகமாகப் போகிறாள் நாகம்மா.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *