எதிர்க்கட்சிகளின் அரச எதிர்ப்பு பேரணி; நாமல் – சுமந்திரன் முடிவு

எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள அரச எதிர்ப்பு பேரணி குறித்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகவும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதன் தோல்விகளுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளால் ஒழுங்கு செய்யப்படும் இந்த எதிர்ப்பு பேரணி குறித்து நாமல் ராஜபக்ஷ இதன் போது விளக்கமளித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி இந்த எதிர்ப்பு பேரணியில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பதால், எதிர்ப்பு பேரணியின் நிகழ்ச்சி நிரல் மற்றும் தாம் எழுப்பும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குத் தெளிவுப்படுத்துவது முக்கியம் என்று நாமல் ராஜபக்ஷ சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பும் பொதுவான கருத்தைப் பகிர்ந்து கொண்டனர். அதன்படி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்கள், இனிமேலும் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது குறித்து கவலைகளை வெளிப்படுத்தியதுடன், மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த அத்தியாவசியமானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும், இந்தத் தேர்தல்கள் அரசியலமைப்பிற்கு இணங்க நடைபெறுவது மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பானது, அரசாங்கத்தை விமர்சிப்பதிலும், ஜனநாயக நடைமுறைகளைப் பாதுகாப்பதிலும் எதிர்க்கட்சிகள் இடையே இணக்கமான பார்வை இருப்பதை வெளிப்படுத்துகிறது.
அத்துடன் கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் நேற்று சனிக்கிழமை ஈடுப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை பொலிசார் முற்றிலுமாக அரசியல்மயமாக்கப்பட்டு விட்டது என்று நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார். தேசியப் பாதுகாப்பு மோசமடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அரசாங்கம் விதித்துள்ள கடும் வரிச் சுமையால் பொதுமக்கள் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தாம் அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைத்து மக்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எதிர்க்கட்சியின் எதிரப்பு பேரணியில் கலந்துகொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
![]()