இலங்கை

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை பலப்பரீட்சை; முக்கிய கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருப்பதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சி இன்று எடுக்கும் முடிவை நாளை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும் எனத் தெரியவருகின்றது.

பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பெரும்பான்மைப் பலம் தன்வசம் உள்ள போதிலும், எதிரணிகளும் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நாளைமறுதினம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *