ஷக்ரான் குழு குண்டுச் சோதனை நடத்திய பகுதியில் மர்மக் குழி!; விசேட அதிரடிப் படையினர் சோதனை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஷக்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து வெடிக்க வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் நேற்று வியாழக்கிழமை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட தாக பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் 2019 ஏப்ரல் 17 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் ஷக்ரான் குழுவினரால மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்துவெடிக்க பரீட்சித்தனர்.இந்த பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அது தொடர்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்தப் பகுதியில் ஏதாவது வெடிபொருட்கள் அல்லது வேறு ஏதாவது பொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் நேற்று வியாழக்கிழமை சென்று அந்த பகுதியில் நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் ஸ்கானர் இயந்திரம் மூலமாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
![]()