இலங்கை

13 தொடர்பில் அழுத்தம் கொடுக்காமை இந்தியாவின் இயலாமையா? தமிழர் மீதான அக்கறை இன்மையா?

13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காமை ஏன் என்று புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்கூட்டணி யின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், இந்தியாவின் இவ்வாறான செயற்பாடு காரணமாகவே நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் இந்தியா மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலக திறப்புவிழா திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது இடம்பெற்ற தனது உரையில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காமை இந்தியாவின் இயலாமையா அல்லது தமிழ் மக்கள் மீதான அக்கறை இன்மையா என்று தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் இன்றைய அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இன்று அவர்களுக்கு இருக்கும் அருமையான சந்தர்ப்பத்தை இந்தியா தவற விடக்கூடாது என்றும் இந்தியா மீது தனக்கு இருக்கும் அளவற்ற நம்பிக்கை மற்றும் தொப்பிள் கொடி உறவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதனை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *