இலங்கை

செம்மணிப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட காலணி 1995 க்கு முற்பட்டது

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியை நேற்று திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

செம்மணி புதைகுழியில் இருந்து காலணி ஒன்று மீட்கப்பட்டது. அதில் 39ரூபா 90 சதம் என விலை காணப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த காலணி நிறுவனத்திடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில் அக்காலணி 1985ஆம் ஆண்டு – 1995ஆம் ஆண்டு கால பகுதியில் சந்தையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அது 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதேவேளை இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட 239 எலும்புக் கூட்டு எச்சங்களையும் ஆய்வு செய்வதற்கான செலவீன அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் தாயரிக்கப்பட்டுள்ளது. அது மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று நிதி ஒதுக்கப்பட்டதும், அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

எலும்புக்கூடுகளை ஆராய்வதற்கு , அகழ்வு பணியில் கடமையாற்றி வந்த சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்தி அதிகாரி மயூதரன் உள்ளடங்கலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி உள்ளிட்ட புதைகுழிகளில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *