பொலிஸார் நெருங்குவதால் நாமல் பெரும் அச்சத்தில்; கைதுகளைத் தடுக்க முயல்கிறார்

பொலிஸார் தன்னிடம் வர முன்னர் பயத்தில் நாமல் ராஜபக்ஸ சில விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்களே சட்டத்தை செயற்படுத்துவதற்கான அதிகாரங்களை வழங்கியுள்ளனர். இதன்படி பாதாள குழுக்களின் தலைவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்யும் போது எவராவது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட போவதில்லை. அவ்வாறானவர்கள் பயந்து கூச்சலிடுவதற்கு பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளு;டன் தொடர்புகளை பேணியவர்கள் யார் என்று அவர்களுக்கு தெரியும். என்பதே காரணமாகும்.
இங்கே அரசியல் பழிவாங்கல்கள் எதுவும் நடக்கவில்லை. கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய கைதுகள் நடக்கின்றன. கைது செய்யப்படுபவர்கள் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. இதன்படி தொடர்ந்தும் கைதுகள் நடக்கின்றன. சட்டம் நியாமாக செயற்படுத்தபடுகின்றது.
விசாரணை பிரிவுகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதை மட்டுமே அரசாங்கம் செய்யும். விசாரணைகளை அந்தந்த நிறுவனங்களே முன்னெடுக்கின்றது.
இதேவேளை கைதுகளை நிறுவதையே நாமல் ராஜபக்ஸ போன்றோர் விரும்புகின்றனர். ஏனென்றால் கெகல்பத்தர பத்மே, பெக்கோ சமந்த உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்ட பின்னர் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் நாமல் போன்றோர் பயப்படுவதற்கு காரணம் உள்ளன. கைது செய்யப்படுபவர்கள் வெளியிடும் தகவல்களுக்கமைய அவர்களிடமும் சட்டம் வரும் என்ற பயமும் உள்ளன. எவ்வாறாயினும் செவ்வந்தியின் பின்னர் எவரையும் கைது செய்ய வேண்டாம் என்று நாமல் கூறுவாராக இருந்தால் அதில் பாரதூரமான விடயம் உள்ளது.
நெவில், மனம்பேரி ஆகியோர் உள்ளேயே இருக்கின்றனர் என்று நாமலுக்கு தெரியும். அந்தப் பயத்தில் பொலிஸ் வருவதற்கு முன்னரே நாமல் சிலவற்றை வெளியிடுவது போன்றே இருக்கின்றது என்றார்.
![]()