இடங்களை மாற்றும் பாதாளக் குழுவினர் இன்ரபோல் உதவியை நாடுகிறது இலங்கை

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இலங்கையின் பிரபல குற்றக் கும்பல்களை சேர்ந்த 25 பேரை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸாரால் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல பாதாள குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தலைமறைவாகியிருந்த இசாரா செவ்வந்தி கைதானதை தொடர்ந்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வரும் பிரபல பாதாள குழுத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தமது இருப்பிடங்களை மாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வந்தி ஊடாக தமது இருப்பிடங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவரலாம் என்றும், செவ்வந்தியை போன்று தாமும் கைது செய்யப்படலாம் என்றும் அவர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள குற்றக் கும்பல்களை சேர்ந்தவர்களின் அதிகமானோர் டுபாய், இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இரகசியமான முறையில் அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புகளை பெற்று அவர்களின் இருப்பிடங்களை கண்டறிந்து கைது செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் நிலையில், அந்தத் திட்டங்கள் தொடர்பில் அறிந்த குற்றக் கும்பல்களை சேர்ந்தோர் இருப்பிடங்களை மாற்றி வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டு வருவதாக இலங்கை பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவர்களை உடனடியாக கைது செய்யக்கூடிய வகையில் இலங்கை பொலிஸாரால் இன்டர்போலின் உதவிகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![]()