இலங்கை

மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவர் மூலம், ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

” எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்” என்று ‘பத்மே’ தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

‘கெஹெல்பத்தற பத்மே’ உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், அடுத்த நாள் ‘கெஹெல்பத்தற பத்மே’வின் நெருங்கிய நண்பரான மத்துகம ஷான் என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளார்.

புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் அன்றைய தினம் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்ததால், அந்த நாளைத் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் தான் எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மத்துகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டில் உரிமையாளரையும், அவருடைய மருமகனும் அளுத்கம பொலிஸில் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.

அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், ‘ஹரக் கட்டா’வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *