அரசாங்கம் கொழும்புக்குரியது என்பதில் சிறு உண்மை உண்டு; யாழில் அமைச்சர் பிமல் தெரிவிப்பு

அரசாங்கம் கொழும்புக்கு உரியது என யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய தமிழ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அதில் சிறு உண்மை உண்டு. தூரம் அதிகம். பிரச்சினைகளை கேட்பது குறைவு. அதேபோல் தீவக மக்களின் பிரச்சினையும் யாழ்ப்பாணத்திற்கு கேட்பது குறைவு என நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தமிழ் சிங்கள மக்களை ஒரே பார்வையில் எமது அரசாங்கம் பார்க்கும். யுத்தத்திற்கு பயந்தவர்கள் தற்போது சமாதானத்திற்கு பயப்படுகிறார்கள்என்றும் அவர் மேலும் கூறினார்
குறிகட்டுவான் வீதி புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
குறிகட்டுவான் இறங்குதுறையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இறுதியாக நான் நெடுந்தீவு சென்றபோது அங்குள்ளவர்கள், பணிபுரிபவர்கள் சாதாரண படகில் சென்று மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக அறிந்தேன்.
நெடுந்தீவு மற்றும் நயினாதீவு மக்களுக்கு இலங்கை கடற்படை ஊடாகவே எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பெடுத்தபோது அதை செய் இதை செய் என அதிகாரிகள் கேட்கவில்லை. கடிதம் எழுதி காத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.
ஆட்சிக்கு வர முன்னரும் நான் நெடுந்தீவுக்கு சென்றேன். பொதுமக்களின் பிரச்சினையை தேடிச் சென்று நாம் அறிந்தோம்.
மே மாதத்தில் யோசனையை முன்வைத்து 4 மாதங்களில் அபிவிருத்தி பணியை ஆரம்பித்துள்ளோம்.அடுத்த வருடம் இதே கால பகுதிதிக்குள் இதனை முடிக்க திட்டமிட்டுள்ளோம். 299 மில்லியன் ரூபா செலவாகிறது. அதேவேளை ஏழு படகுகளை ஒரே நேரத்தில் நிறுத்த இறங்கு துறையை புனரமைக்க 800 மில்லியன் ஒதுக்கப்படுகிறது. அடுத்த வருடத்தில் இதே காலத்தில் அது நிறைவுபெறும்.
இயந்திரம் ஊடாக நெடுந்தீவுக்கு எரிபொருளை இறக்க கடற்படையினருக்கு 7 மணி நேரம் ஆகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திலில் 270 ரூபாவுக்கு டீசல் விற்பனையாகிறது. அதே டீசல் நெடுந்தீவில் 300 ரூபாவுக்கு விற்பனையாகிறது.
வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை உருவாக்க முடிகிறது.இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பத்தை கடற்படைக்கு வழங்குவோம். இதன்மூலம் 45 நிமிடங்களில் எரிபொருளை நெடுந்தீவில் இறக்க முடியும்.
இந்த பிரதேச மக்கள் கொடுத்த ஆணையால் மகிழ்ச்சி அடைகிறேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய அரசியல்வாதிகள் அரசாங்கம் கொழும்புக்கு உரியது என கூறுகின்றனர். அதில் சிறு உண்மை உண்டு. தூரம் அதிகம். பிரச்சினைகளை கேட்பது குறைவு. தீவக மக்களின் பிரச்சினை யாழ்ப்பாணத்திற்கு கேட்பது குறைவு. தீவக மக்களுக்கு கிடைக்கும் வசதி யாழ்ப்பாணத்தில் இருப்பது போல் இல்லை.
தீவகத்தில் ஆசிரியர் மற்றும் போக்குவரத்து பிரச்சினை உள்ளது.
தீவகத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைகிறேன்.குறிகட்டுவானில் 3.2 கிலோமீட்டர் வீதியை மாத்திரமல்ல முழு வீதியையும் புனரமைக்க அடுத்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவோம். தரிப்பிட வசதியுடன் வீதி அமைக்கப்படும்.
தமிழ் சிங்கள மக்களை ஒரே பார்வையில் எமது அரசாங்கம் பார்க்கும். யுத்தத்திற்கு பயந்தவர்கள் தற்போது சமாதானத்திற்கு பயப்படுகிறார்கள். நாம் வேலை செய்வது இலங்கையின் அனைத்து மக்களுக்குமே. இதற்கு பயந்த சிறு அரசியல் குழு தெற்கிலும் வடக்கிலும் இருக்கிறது. அவர்கள் சமாதானத்திற்கு பயப்படுகிறார்கள்.
குறிகட்டுவான் மூலம் இலங்கைக்கு நல்லிணக்கத்தை காட்ட முடியும். நாக விகாரையைம் அம்மன் கோவிலையும் ஒரே இறங்குதுறையில் கும்பிட செல்கிறார்கள்.குறிகட்டுவான் இறங்கு துறையை தேசிய மக்கள் சக்தி செய்யும் ஒன்றிணைந்த தேசிய ஸ்தலமாக நாம் பார்க்கிறோம். இந்த செயல்பாட்டை விரைவில் முடித்துக் கொடுப்போம் என்றார்.
![]()