இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிகவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர அரசு திட்டம்!

“பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதைவிடவும் மிகவும் பாரதூரமான சட்டமொன்றை கொண்டுவருவதே அரசின் திட்டமாக உள்ளது” என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மறந்துவிட்டே அரசு செயற்படுகின்றது. ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் பற்றி அதிகளவில் பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை திசை திருப்பும் நோக்கிலேயே இவ்வாறு செயற்பட்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும், அதைவிட மிகவும் பாரதூரமான சட்டமொன்றை கொண்டு வருவதற்கே ஆளுங்கட்சி முற்படுகின்றது.

மன்னாரில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது சிறிய நேபாளமாக மன்னார் மாறியுள்ளது. இவ்வாறான மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதாக இருந்தால் ஆளுங்கட்சிக்கு அடக்குமுறை என்பது அவசியம். அதனால்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர முற்படுகின்றனர்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சி மௌனம் காக்கின்றது. எல்லை நிர்ணய விவகாரத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வடக்கு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *