இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது

“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற்றியபோதே சிறீதரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, சமாதானம் நிலவும் தற்காலத்திலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குறித்த எனது நீண்டகால கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுங்கோன்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர்.

தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

நான் 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முறையான நிபுணத்துவம் உடையவர்களால் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எனவே இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என்ற விடயம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் உள்வாங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு இடைக்கால நீதிப்பொறிமுறையின் ஓரங்கமாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படவேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிக்கான அணுகலை மேற்கொள்வதற்கும், இழப்பீட்டை பெறுவதற்கும், விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதற்குமான வாய்ப்பு கிட்டவேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றார்.

Loading

One Comment

  1. நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு.சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்களுடையு நாடாளுமன்ற இருக்கையைத் தக்க வைப்பதற்காக இல்லாததையம் பொல்லாததையம் ஐக்கியநாடுகள் சபையில் கதைத்து பிர்ச்சினைகளை இன்னும் சிக்கலாக்காதீர்கள்.

    நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னர் இருந்த உங்களின் சொத்து மதிப்பீட்டுக்கும் இப்பொழுது உள்ள சொத்து மதிப்பிடடுக்குமüpடையில் மிகப்பெரு வேறபாடு இருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் சொல்லுகின்றன.

    இரண்டு வைன் கடைகளை வேறு எவரோ பெயர்களில் நடத்துவதாக அறிகிறோம். அங்கை அது இங்கை அது என்று அணைந்து போக இருக்கிறங நெருப்பை ஊதிச் சுவாலையாக்குவது நீங்கள்தான்.

    செம்மனிப் புதைகுழியை ஆராய இந்த அரசாங்கந்தானே ஏற்பாடு செய்தது.அவர்கள் அதற்கான பணத்தை அரசாங்கம் நிறுத்தவில்லை.

    வேறு ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா.நீங்கள் அரசாங்கத்துக்கு ஜனாதிபதிக்கு நன்றழியாவது சொன்னீர்களா?.

    தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டுந்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வேலையல்ல .நல்லது நடந்தால் அதைப் பாராட்ட வேண்டும் நன்றி சொல்ல வேண்டும் என்பதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பண்பு.

    இத்தனைக்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து அதிபராக இருந்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறீர்கள்.

    ஒரு ஆசிரியராக இருந்த உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா.உங்களுடைய நோக்கம் இல்லாத பிரச்சினையை இருக்கிறதாகக் காட்டி காட்டுத் தீயாக வளர்த்து தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியைத் தக்க வைப்பதே உங்களுடைய நோக்கம்..

    சமகால அரசியலில் எவ்வாறு எமது நோக்கத்தை நிறைஙவேற்றுவது என்ற எந்த அணுகுமுறையுமே தெரியாது பொதுமக்களையும் தவறாக வழிநடத்தி வருகிறீர்கள்.

    குடிப்பதே உடல்:நலத்துக்கு கேடு .அக்கேடு விளைவிக்கும் குடித்தவறணையத் திறக்க ஒத்துழைப்பு வழங்கிய நீங்கள் அப்பணத்தில் வேறு ஏதாவது அபிவிருத்தி செய்திருக்கலாமே.

    சாக்கரட்டீஸ் சொன்ன உனை நீ அறி என்பது உங்களுக்குப் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *