இலங்கை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச தடைகள் விதிக்கப்பட வேண்டும்! ; சிறீதரன் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கு, ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர்,

நியமிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறீதரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ”இலங்கை குறித்து, ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டும். இடைக்கால நீதி பொறிமுறை நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான சர்வதேச தடைகளும் விதிக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதானக் காலத்திலும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு தொடர்பாக எனது, நீண்டகாலக் கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கொடுமையான, விதிகளுக்குப் பலியாகி வருகின்றனர்.
தற்போது, செம்மணியில் உள்ள பொது கல்லறை குறித்து நடைபெற்றுவந்த முக்கியமான நீதித்துறை விசாரணைக்கான நிதியை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

சாட்சிகளின் மீதான அச்சுறுத்தல், பத்திரிகையாளர்கள் கைது போன்றவை இன்றும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம், ஒரு சுயாதீனமான, பன்னாட்டுத் தனித்துவமான விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

குறிப்பாக, 2009ஆம் ஆண்டு மே மாத இறுதி கட்டப்போரின்போது இடம்பெற்ற கொடூர குற்றச்செயல்களைப் பற்றிய சுதந்திரமான,
வெளிப்படையான மற்றும் நிபுணத்துவமான விசாரணைகள் நடைபெறுவது அவசியம். எனவே, இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டும். இந்நடவடிக்கையில் உறுதிப்பாடு இருக்க வேண்டுமெனில், பொதுமக்கள் நீதிக்கான அணுகலை, இழப்பீட்டை, மேலும் விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுதல் அவசியம்.
ஏனெனில், தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஞ்சுகின்றனர்
மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் இதனை வெளிப்படுத்தவும் அச்சப்படுகின்றனர்.

நானே கூட இலங்கை அரசாங்கத்தாலும் அதற்கு ஆதரவாக செயற்படும் இராணுவமல்லாத குழுக்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு,
தாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, பல சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த குடும்பத்தினர் முதுமையடைந்து வருகின்றனர், சிலர் உயிரிழந்து வருகின்றனர்,

சிலர் அச்சத்தில் வாழ்கின்றனர், மற்றவர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சினை மிகுந்த அவசரத்தன்மையுடையது.
உடனடியான நீதி மற்றும் நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழ் மக்கள் இந்த ஜ.நா கூட்டத்தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *