இலங்கை

அநுரவின் அரசாங்கத்திலும் அடக்குமுறை நீடிக்கிறது ; சிவில் சமூக கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவும், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் முரணான விதிகளை திரும்பப் பெறுவதாகவும், ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் அமைப்பை நிறுவுவதாகவும் உறுதியளித்து. ஆனால் பதவிக்கு வருந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில், அடக்குமுறைகள் நீடிப்பதோடு புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களும் தொடர்கின்றன.

வட,கிழக்கில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தல், கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

அம்பாறையில் காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்டுப்போராடும் தம்பிராசா செல்வராணி, கிளிநொச்சியில் பெண்கள் உரிமைகள் அமைப்பாளர் வாசுகி வல்லிபுரம் போன்ற மனித உரிமை பாதுகாவலர்கள் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டனர்.

சிவில் சமூக அமைப்புகள் உளவுத்துறை சேவைகளால், குறிப்பாக நிதி தொடர்பாக, கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் அவை செயற்பட பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறான இராணுவமயமாக்கப்பட்ட மேற்பார்வை 'எதிர்ப்பு குரல்களை அடக்குவதற்கும் அவ்விதமான குரல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்' என்பதோடு சர்வதேச கடமைகளை நேரடியாக மீறுகின்றன.

வட,கிழக்கில் உள்ள பெண்கள் உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, கடுமையான அதிகாரத்தடைகள் அவற்றின் அன்றாட வாழ்வியலை அச்சுறுத்துகின்றன. அமைதியான ஒன்றுகூடலுக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் ஆர்ப்பாட்டங்கள் மீது பலமுறை ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.

2022 வெகுஜன போராட்டங்களுடன் தொடர்புடைய மாணவ அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியான நீதித்துறை துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். 3,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தீர்க்கப்படாத வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

2025 மார்சில், கொழும்பில் 27மாணவ செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்ததோடு தமிழர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் உள்ளன. தமிழர்களுக்கு எதிராக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், அரசாங்கத்தின் உறுதிமொழிகளை மீறி நடைமுறையில் உள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்க்கும் ஸ்டிக்கர்கள் தொடர்பாக 22 வயது முஸ்லிம் செயற்பாட்டாளரான மொஹமட் ருஸ்டி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதற்காக இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதேபோன்று ஊடகவியலாளர்களில் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்குதல்கள் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் கண்காணிப்புக்குள் காணப்படுகின்றனர்.

இதேவேளை, ஆயுத மோதலின்போது நடந்த பாரிய அட்டூழியங்கள் குறித்து ஐ.நா.வின் ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றபோதிலும், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அரசாங்கம் தொடர்ந்து எதிர்க்கிறது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற நிறுவனங்களை அரசாங்கம் செயற்படுத்துகின்றனது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகஸ்ட் மாதம், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதியை வழங்குவதற்கான வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

அது சம்பந்தமான அரசாங்கத்தின் வினைத்திறனான செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. அரசாங்கம் அரசியல் ரீதியான சீர்திருத்த வாக்குறுதிகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. அக்கலாசாரம் ஆழமாக வேரூன்றி உள்ளது என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *