இலங்கை

ஒற்றுமை இல்லையேல் கடையை மூடிவிட வேண்டியதுதான் – செல்வம்

வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

இதேவேளை மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயமானது ஒரு நியாயமான விடயமாக நான் பார்க்கின்றேன்.

எங்களை பொறுத்த வரையில் ஒற்றுமை இன்மையை கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் அனுபவித்திருந்தோம்.

குறிப்பாக எமது ஒற்றுமை இன்மையினால் தமிழ் மக்கள் விரக்தியுடன் இருந்தனர்.

இதன் காரணமாகவே மக்கள் யாருக்கு வாக்கு போடுவது என்ற குழப்பத்தில் இருந்தனர்.

மேலும் இவ் ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரை புதிய அரசை தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியிலேயே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்திருந்தனர்.

இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தேசிய கட்சிகளின் பிரதித்துவம் உருவாகியது. இது ஒரு செய்தியாகவே நாம் பார்க்க வேண்டும்.

குறிப்பாக எமது செயற்பாடுகள் வெறுமனவே பேச்சளவில் காணப்படுமேயானால் எமது மாகாணசபை நிச்சயமாக மாற்று கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும்

அவ்வாறு ஏற்பட்டால் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.

எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப்பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும்.

எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது.

அத்தோடு அதற்காக நாங்கள் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் எட்டப்படவில்லை.

ஐ.நாவிற்கு கடிதம் எழுதும் போதோ அல்லது ஐநாவிற்கு கையொப்பம் இடுகின்ற சந்தர்ப்பத்தின் போதோ ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் கட்சிகள், தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமையாக இருக்காமல் பிரிந்து செல்லுகின்ற அபாய நிலை இருக்கின்றது.

எனவே ஒற்றுமையாக மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *