கவிதைகள்
“மலைமகள் துதி கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

உடலும் உளமும் உரமாய் இருக்க
உனது திருவடி துணையே எமக்கு
மனதில் அழுக்கை அகற்றிடு சக்தியே
மலரடி அடைக்கலம் துர்க்கை அம்மா
தினமும் நின்னை நினைக்கிறோம் அம்மா
திசயெலாம் நீயே தெரிகிறாய் அம்மா
அனைத்தும் நீயாய் ஆகிறாய் அம்மா
அன்னை துர்க்கையே அருள்புரி தாயே 

துன்பம் இளைக்கும் துட்டர் திருந்த
துயரப் படுவார் துன்பம் நீங்க
பஞ்சம் பிணியும் பறந்தே ஓட
பாதம் தொழுகிறோம் பார்த்திடு அம்மா
அரக்கக் குணங்கள் அகன்றிட வேண்டும்
அன்பும் அறனும் அமர்ந்திட வேண்டும்
தர்மம் தானம் பெருகிட வேண்டும்
தாயே துர்க்கையே நீதான் துணையே
ஈரமும் ஈந்திடு வீரமும் ஈந்திடு
இன்புடன் இருக்க நல்லருள் நல்கிடு

காப்பவள் நீயே கருணையின் உருவே
கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே.
……………………………………………………………………………………………….!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா
![]()