ஐயாயிரம் இலட்சம் ரூபாவில் வீட்டை திருத்தியவர் மகிந்த

வாழ்வதற்கு வீடு இல்லாமல் உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த வீட்டினை திருத்தியமைப்பதற்காக ஐயாயிரம் இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளமை பாரிய குற்றமென்பதுடன் பெரும் அநியாயமான விடயம் எனவும் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
கிராமிய வீதிகளை திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் பாரிய வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் தலாவ பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட எப்பாவல,கல்வடுவாகம நீதியினை 75 மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கும் பணிகளை நேற்று முன்தினம் புதன்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்;
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானங்கள் உடைய குடும்பங்களுக்கு புதிதாக 150 க்கும் அதிகமான வீடுகள் அமைப்பதற்காக வேண்டி 1400 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு வாழ்வதற்கு வீடு இல்லாமலும் உண்பதற்கு உணவு இல்லாமலும் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போது ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த வீட்டினை திருத்தியமைப்பதற்காக ஐயாயிரம் இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளார். இதனை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
எனவேதான் ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் இனிமேல் வழங்கப்படமாட்டாது.அந்த அனைத்து நிதியும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
இந்த நாட்டின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் நிதியை சூறையாடியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தலாவ பிரதேச சபையின் தலைவர் கருணாதாச திசாநாயக்க உள்ளிட்ட பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
![]()