இலங்கை

வடக்கு கிழக்கு பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள்நேற்று திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் ஆரம்பமானது.

இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்த நிலையில் இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த காலை 9.45 மணியளவில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர் நீத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *